சுமை தாங்கி
விடியற்காலை சேவல் கூவும் முன்னே எழுந்து முகம் அலம்பி, கோபால் பல்பொடியால் பல் துலக்கி, கிழக்கு வெளுக்கும் முன்னமே குளித்து கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டை போட்டுக் கொண்டாள். கொல்லப் புறத்தில் முந்தின இரவு வெட்டி வைத்து இருந்த வேலி முள் விறகை வைத்து அடுப்பு மூட்டி உலை வைத்து, பக்க அடுப்பில் காப்பி சட்டியை வைத்து கருப்பட்டிக் காப்பி போட்டு குடித்து விட்டு, மண்பானையிலிருந்த பழைய கஞ்சியை ஈயக் கும்பாயில் ஊற்றி கலக்கி குடுவையில இருந்த நார்த்தங்காய் ஊறுகாயைத் தொட்டுக் குடித்து விட்டு, அடுத்த முக்கால் மணி நேரம் அடுப்படியில் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று ஆக்கிய சோறு குழம்பைக் கொதிக்கக் கொதிக்க தூக்குவாளியில் நிரப்பி ஒயர் கூடையில எடுத்துக் கொண்டு மாமியார் முத்தம்மாவை எழுப்பி வீட்டுக் காரியங்களை விளக்கினாள் செல்வி.
"எதுக்கு செல்வி ஒனக்கு இந்த வேண்டாத வேல? இங்கன வீட்டுக்கு அடுத்தாப்ல இருக்குற வாசுகி தீப்பெட்டி ஆபிசுக்கு வேலக்கி போறத விட்டுபுட்டு மேலப்பட்டி ஆபிசுக்கு ஏன் போற?"
"இங்க சம்பளம் கட்டுபடி ஆகல அத்தே..."
"போர்மேன் நம்ம சொந்தக்காரப் பய ராமையா தான அவன் தான ஒன்ன மேப்பெட்டி ஒட்டுற வேலயில இருந்து பெட்டி கை பாக்க, தீப்பெட்டி தட்டு கணக்கு பாக்கன்னு கணக்குப்பிள்ள மாதிரி வச்சிருந்தான் அவன் கிட்ட சமபளம் கூட்டி கேக்கலாம்ல..."
"அவன் போக்கு சரி இல்லத்தே... இனிமேலும் அவன் கூட வேல பாத்து கணக்கு வழக்கு சரியா பாக்க முடியும்னு தோணல..."
"அந்த பயலுக்கு போர்மேன்னு திமிரு... அதுக்காக பத்தாப்பு வர படிச்சிருக்க நீயே இப்படி சொன்னா எப்புடி? சரி எந்த தீப்பெட்டி ஆபிசா இருந்தா என்ன? வாங்குற சம்பளத்துக்கு நியாயமா ஒழைக்கறே எங்க போனாலும் பொழச்சிப்ப"
"அவன் திமிரு எல்லாம் என்கிட்ட செல்லாது... என்ன ஒண்ணு இந்த தீப்பெட்டி ஆபிசுனா நினைச்ச போது வீட்டுக்கு வந்துட்டு போவேன் அது தான் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு..."
"சரி விடு, எல்லாமே வெரசா சரியாயிடும்."
தூரத்தில் பஸ்ஸின் அலாரம் 'கீங்க் கீங்க்' என ஒலிக்கவே அத்தையிடம் விடை பெற்று ஊர் பொது களத்தில் நின்றிருந்த பஸ் நோக்கி வேகமாக நடந்தாள்.
ஒவ்வொரு ஊரின் பொது இடங்களில் நின்று பெண்களை ஏற்றிக்கொண்டு இளையரசனேந்தல் ரோட்டில் அய்யனேரியைத் தாண்டியதும் பஸ் வேகம் எடுத்து ஓடியது. சாலையின் இரு புறமும் இருந்த புளிய மரங்கள் விருட்விருட்டென்று பின் நோக்கி ஓடுகின்றன. கன்னங்கரேல் என்ற கரிசல் காடுகள் வட்டச் சுற்றாகச் சுற்றிச் சுழன்று பின்னோக்கி ஓடுகின்றன. எதையும் பார்த்து ரசிக்கிற மன நிலையில் இல்லை செல்வி.
ஜன்னல் வழியாகக் காற்று வந்து மோதுகிறது. படியில் இருந்து இரண்டு ஸீட் தள்ளி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தவளின் முகத்தில் அறைந்தது, காதோர முடிக் கற்றைகள் காற்றில் அலைய செல்வியின் மனசும் கிடந்து அலைபாய்ந்தது.
ராமையா அவளுடைய தூரத்து சொந்தம். செல்வியை விட மூன்று நான்கு வயது இளையவன். அவளுடைய குடும்ப சூழ்நிலை அறிந்து மேப்பெட்டி மடித்து ஒட்டியவளை தீப்பெட்டிகளைச் சரி பார்த்து போராச் சாக்கில் அளந்து கணக்குப் பார்த்து வில்லை தரும் வேலையில் அவளை அமர்த்தி நல்ல வாரச் சம்பளமும் வாங்கிக் கொடுத்தான்.
கூட வேலை பார்க்கும் பெண்கள் ஆரம்பத்தில் இவர்கள் இருவரைப் பற்றியும் இவள் காது பட கிசுகிசுத்தாலும் இவள் அதைக் காதில் வாங்கியதுமில்லை பொருட்படுத்தவுமில்லை.
'ராமையா என்னோட ஒன்னு விட்ட தம்பி' என்று தான் மற்ற பெண்களிடம் சொல்லி இருந்தாள். ராமையாவும் செல்வியை 'அக்கா' என்று தான் கூப்பிட்டு வந்தான்.
'ராமையா என்னோட ஒன்னு விட்ட தம்பி' என்று தான் மற்ற பெண்களிடம் சொல்லி இருந்தாள். ராமையாவும் செல்வியை 'அக்கா' என்று தான் கூப்பிட்டு வந்தான்.
நாளாக நாளாக, ராமையாவின் பார்வையிலும் நடத்தையிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது, டேப் ரிக்கார்டரில் மோகன் ஹிட்ஸ், T.ராஜேந்தர் பாடல்கள் மட்டுமே எப்போதும் ஒலிக்கும் இப்போது 'நேத்து ராத்திரி எம்மா' 'நிலா காயுது' 'கண்ணத் தொறக்கணும் சாமி' இப்படி முக்கல் முனகல் பாடல்களும், விதி திரைப்பட கதை வசன கேசட்டும் ஒலிக்க விட்டு செல்வியை ஓரக்கண்ணால் பார்த்து இளிக்க ஆரம்பித்தான். பேச்சின் இடையில் இரட்டை அர்த்தம் தாராளமாக புரண்டது.
செல்வியும் அவளது எதிர்ப்பை நாசூக்காக பலமுறை வார்த்தையிலும் செயலிலும் காட்டி வந்தாள்.
செல்வியும் அவளது எதிர்ப்பை நாசூக்காக பலமுறை வார்த்தையிலும் செயலிலும் காட்டி வந்தாள்.
ஒரு நாள் சாப்பாட்டு வேளையில் "செல்வி கையால என்னைக்குச் சாப்பிட போறனோ ப்ச்... நமக்கு அந்த குடுப்பினை இன்னும் வாய்க்கல" எனச் சொன்னதும் அவனை முறைத்துப் பார்த்தாள் செல்வி.
"இல்ல செல்வி ஒன்ன விட ஒன்னு ரெண்டு வயசு தான கம்மி எதுக்கு அக்கான்னு கூப்பிட்டுகிட்டு?" என்று சொல்லி விட்டு கள்ளச் சிரிப்பு சிரித்தான்.
கோவத்தில் சிவந்த கண்களால் அவனை முறைத்துப் பார்த்தபடியே எழுந்து போய் தென்னை மரத்தின் அருகில் இருந்த தண்ணிக் குழாயில தூக்குவாளியையும் கையையும் கழுவ ஆரம்பித்தாள். பின்னாலயே டிபன் பாக்ஸை தூக்கிக் கொண்டு வந்தவன்,
"வீட்டுக்கு வந்தா வெறும் காப்பித் தண்ணி மட்டும் கொடுத்து ஏமாத்துற... சரி இங்கயாவது முழு சாப்பாடு இல்லனாலும் டிபன் ஆவது சாப்பிடலாம்னா அதுக்கும் வழி இல்ல..."
"என்ன உளர்ற கோட்டி கீட்டி பிடிச்சிட்டா ஒனக்கு?" என்று கோவமாக கேட்க,
"ஆமா செல்வி ஒம்மேல கோட்டி பிடிச்சிட்டு..."
மறுநொடி அவனைக் கண்களால் எரிப்பது போல் முறைத்துப் பார்த்த செல்வி, தூக்குவாளியில் இருந்த தண்ணீரைக் கீழே உதறிவிட்டு ஜெனரேட்டர் இருந்த அறையின் உள் சென்று தூக்குவாளியைக் கவிழ்த்து காய வைக்க குனிந்தவள் திடுக்கிட்டு அலறினாள், அவளின் இடுப்பில் கை வைத்தபடி இளித்தபடி பின்னால் நின்றிருந்தான் ராமையா. அடுத்த நொடி கையில் இருந்த தூக்குவாளியால் அவனைத் தாக்க, தூக்குவாளியின் காது அறுந்து பறந்தது, அது கொடுத்த அடியில் தலையில் கீறி ரத்தம் கொட்ட... அவன் சமாளித்து நிமிரும் முன் இடது காது ஓரம் செல்வியின் வலது கை அடி சுளீர் என விழுந்தது. கீழே கிடந்த தூக்குவாளிய எடுத்து மறுபடி ஓங்க... ராமையா இரு கைகளையும் கூப்பியபடி,
"எக்கா என்ன மன்னிச்சிக்கோக்கா, தெரியாம பண்ணிட்டேன்கா மன்னிச்சிறுக்கா இனி இப்படி பண்ண மாட்டேன் விட்டுரு..." என்று கதறினான். ஜெனரேட்டர் அறைக்குப் பக்கத்தில் தீக்குச்சிகளை சலிக்கும் இயந்திரத்தின் சத்தத்தில் ராமையாவின் கதறல் வெளியே கேட்கவில்லை. அவனுடைய அலறல் சத்தத்தைப் பொருட்படுத்தாமல் வேகமாக அறையை விட்டு வெளியே சென்று விட்டாள் செல்வி.
செல்வி நெஞ்சு கொதித்தது. அத்துமீறிய அவனுடன் இனிமேல் ஒரே இடத்தில் வேலை செய்வது சரி வராது என்று தான் 20 மைல் தள்ளி இருக்கும் மேலப்பட்டிக்கு வேலைக்குப் போகிறாள் செல்வி.
எட்டு மணி இரவுக்கு பஸ்ஸில் இருந்து இறங்கியவள் ஓட்டமும் நடையுமாக வீடு நோக்கி நடந்தாள். தெருமுனையில் இவள் திரும்பியதுமே வீட்டின் முற்றத்தில் மின் விளக்கின் வெளிச்சத்தில் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த குழந்தைகள் இவளைப் பார்த்ததும் ஓடி வந்து ஆளுக்கு ஒரு கையைப் பிடித்துத் தொங்கிக் குதித்தபடியே வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
"எம்மோய்... இன்னைக்கி கடன் வாங்கி கழித்தல் கணக்கு நானே போட்டேன், ஆனா செல்வா தான் இன்னும் ஆணா ஆவண்ணா எழுதி முடிக்கல." என்றாள் மகள் செவ்வந்தி.
"எம் புள்ளைக்கு எம்புட்டு அறிவு!" என்று மகளின் கன்னத்தில் முத்த மிட்டு... "அம்மா வந்துட்டேன்ல, செல்லத்துக்கு கையப் பிடிச்சு ஆணா ஆவண்ணா எழுதி தரேன்"என்று மகனின் கன்னத்தைக் கிள்ளி வாயில் கையை முத்தமிட்டாள்.
திண்ணையில் அமர்ந்து இருந்த மாமியாரைத் தாண்டி வீட்டிற்குள் சென்றாள். மூலையில் கயிற்றுக் கட்டிலில் கட்டிட விபத்தில் அடிபட்டு கைகால் உடைந்து கட்டு போட்டுக் கிடந்தான் கதிரேசன். அவனைக் கண்ட செல்வி,
"மருந்து குடிச்சீங்களா? ராணி மதினி நாட்டுக்கோழி முட்டை தரேன்னு சொன்னாங்க மறந்துட்டேன். இப்ப இருட்டுன பொறவு எப்புடி போயி கேட்க? மதியம் சாப்டீங்களா?" என்று கேட்டுவிட்டு சமையலறைக்குச் சென்றாள் செல்வி.
"வந்ததும் வராததுமா ஏன் அடுப்படிக்கு போற? ஏன் வாசுகி தீப்பெட்டி ஆபிசு போகாம மேலப்பட்டி தீப்பெட்டி ஆபிசு போற? காலையில எட்டு, ஒம்பது மணிக்கு வேலக்கி போயி சாயங்காலம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வர்ற வேலய விட்டுபுட்டு இப்படி விடிஞ்சதும் வேலக்கி போயி ராத்திரி எட்டு எட்டரைக்கு வீட்டுக்கு வந்து ஏன் கஷ்டப்படுத?"
"கஷ்டம் எல்லாம் ஒன்னும் இல்லீீங்க, சம்பளம் கூட கிடைக்குமேன்னு தான் அந்த தீப்பட்டி ஆபிசுக்கு போறேன்."
"இல்ல, வேற என்னமோ காரணம் இருக்கு... தெனமும் வேல முடிஞ்சு வந்து என் கூட பேசிட்டு காப்பி தண்ணி குடிச்சிட்டு போற ராமையா ரெண்டு நாளா வரல ஒனக்கும் அவனுக்கும் என்னமும் பிரச்சினையா?"
"அட நீங்க வேற அப்படி ஒன்னுமில்ல, நீங்க வீணா மனச போட்டு குழப்பிக்காதீங்க."
"சரி சரி நீ என்கிட்ட எதையும் மறைக்க மாட்ட ஒனக்கா எப்போ சொல்ல தோணுதோ அப்ப சொல்லுவ" என்றான் கதிரேசன்.
"ம்ம்ம்.. நாளைக்கு வீரப்பட்டி வைத்தியர பார்த்துட்டு என்னைக்கு கட்டு பிரிக்கலாம்னு கேட்டு வருவமா?" என்று பேச்சைத் திசை திருப்பினாள்.
"கை வலி முன்னைக்கு இப்ப பரவாயில்ல கால் தான் வலி குடையுது... கோழி கூவும் முன்ன எழுந்து வீட்டு வேல பாத்து, சோறு குழம்பு ஆக்கி வேலக்கி போயி வந்து, மறுபடி வீட்டு வேல புள்ளயளுக்கு பாடம் சொல்லி கொடுத்து என்னயவும் புள்ள மாதிரி பாத்து எங்கம்மாவையும் கவனிச்சிக்கிடுற, எப்படி ஒன்னால முடியுது?"
"இப்ப எதுக்கு இதெல்லாம் எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்ங்க..." எனச் சொல்லிவிட்டு கட்டிலில் கிடந்த கணவனைத் தூக்கி கைத் தாங்கலாக வீட்டின் பின் புறம் தென்னம் மட்டையில் வேய்ந்து இருந்த நெரசலுக்கு கூட்டிச் சென்றாள்.கணவனின் முன் கோவத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்ததாலையே ராமையாவைப் பற்றி இப்போது கூறவில்லை.
இரண்டு மாதங்களுக்கு மேல் படுத்த படுக்கையானதிலிருந்தே தன்னோட மனைவி ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல், முகம் கோணாமல் மொத்த குடும்பத்தோட பாரத்தையும் தாங்கிக்கொண்டு வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கிற கதிரேசனுக்கு செல்வி ஒரு சுமை தாங்கி ஆகவே தோன்றுகிறாள்.
குறள் 56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
பொருள்:
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
-அ.வளர்மதி
கதை அருமை 👌🏾
ReplyDeleteநனி நன்றி. மகிழ்ச்சி.
ReplyDeleteநல்லா எழுதியிருக்கீங்க..
ReplyDeleteஅவள் சுமைதாங்கி தான்..
Arumaiyana thalaippu SUMAITHANGI
ReplyDeleteArumaiyana thalaippu SUMAITHANGI
ReplyDelete