Saturday, 9 February 2019

நடுவுல கொஞ்சம் நெலத்தக் காணோம்...

ஊரின் மத்தியில் இருந்த சமுதாயக் கூடத்தின் திண்ணையை நோக்கித் தோளில் கிடந்த துண்டால் வியர்வை வடிந்த முகத்தைத் துடைத்தபடியே வந்த வேலுச்சாமியைத் தலையாரி தங்கராசு ஆர்வமாக வரவேற்றார்.

"ஏ... வேலு வாப்பா வாப்பா... என்ன இந்தப்பக்குட்டு தப்புனாப்ல வந்து இருக்க? என்ன சேதி?"

"அன்னைக்கே சொல்லி இருந்தேன்ல மேட்டுத்தெருல அனந்தம்மா நெலத்த வாங்க போறதா... அதான் இன்னைக்கு சர்வேயர் வர்றாப்ல நீங்களும் ஒரு எட்டு கூட வந்தா நல்லா இருக்கும்."

"அட... ஆமால, ஊர் கடைசியில இருக்குற அந்த 'ஆன கெடங்கு'  நெலந்தான... பல சோலில மறந்துட்டேன்பா... அனந்தம்மா கூட புள்ளயோட கல்யாணம் வருது வெரசா நெலத்த விக்கணும்னு சொல்லிச்சி... எப்ப அளக்க வர்றதா சொன்னாரு..."

"ஆமா... அந்த நெலம் தான். வெயில்தாழ மூணு நாலு மணி வாக்குல வர்றேன்னாப்ல...  அதான் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்."

"ஓ... சர்வேயர் பரமசிவம் வந்ததும் வீட்டுக்கு ஆள் அனுப்பு நான் வந்துடுறேன்."

ஊரின் கிழக்கு எல்லையில் சாமியாடி மாடசாமியின் வீட்டின் கிழக்குப்புறமும், நையாண்டி மேளக்காரர் பெரிய மாரியப்பன் வீட்டிற்குத் தெற்குப்புறமும் இருந்த அந்த நிலம் 'யானைக் கிடங்கு' என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நிலத்தின் முன்பகுதி பன்னிரண்டு அடிக்கு மேல் வட்ட வடிவில் ஆழமான குழியாகவும் பின்புறம் மேடாகவும் இருந்தது.

இரும்புச் சங்கிலிகளைக் கிழக்கும் மேற்குமாக, வடக்கும் தெற்குமாக இழுத்தபடி அளந்து கொண்டிருந்தார் பரமசிவம். தங்கராசு கூறிய அளவுகளை வெள்ளைத்தாளில் குறித்துக் கொண்டிருந்த பரமசிவத்தின் நெற்றிக்கண் திறந்ததை தங்கராசு  ஒற்றைக்கண்ணால் பார்த்தார்.

தூக்குவாளியில் கொண்டு வந்து இருந்த மோரை இருவருக்கும் சொம்பில் ஊற்றிக் குடுத்தார் வேலுச்சாமி.

மோரில் கிடந்த மிளகாய், இஞ்சித் துண்டு, கொத்தமள்ளித் தலைகளை மென்று துப்பியபடியே... "பத்திரபதிவு என்னைக்கு வச்சிருக்கீங்க?" என்றார் பரமசிவம்.

"அனந்தம்மா நாளைக்கே கூட வச்சிகிடலாம்னு சொல்லிருக்கு..."

"அட நீ வேற... ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டாமா?  நாளக்கழிச்சி பொதன்கெழம, பொன்னு கெடச்சாலும்  பொதன் கெடைக்குமா?  என்ன சொல்லுத?" என்றார் பரமசிவம்.

"நீங்க சொன்னா சரி தான், அன்னைக்கே வச்சிகிடலாம்."

"சரி வேலு... நான் பரமசிவத்த அனுப்பிட்டு வரேன், நீ பொதன்கெழம பத்திரம் பதுஞ்சுகிடலாம்னு அனந்தம்மா கிட்ட சொல்லிடு." என்றார் தங்கராசு.

"ஆமா ஆமா அவசரம் வேணாம். பொதன் கிழமயே பத்திரம் பதியலாம்" 

வேலுச்சாமியிடம் சிரித்தபடியே கூறிவிட்டு மேட்டில் நின்றிருந்த தன்னுடைய BAJAJ M80 வண்டியை நோக்கி நடந்து சென்ற பரமசிவத்தைப் பின் தொடர்ந்தார் தங்கராசு.

கொஞ்சம் தூரம் சென்றதும் தேநீர் கடையில் வண்டி நின்றது. தேநீர் வருவதற்கு முன்பே இருவரும் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

"அது இலவச பட்டா நெலந்தான... மூணு செண்டுக்கு மூணே முக்கா செண்டு நெலம் இருக்கு அத வடக்கால இருக்குற பெரிய மாரியப்பன் நெலத்தோட சர்வே நம்பர வச்சி எதாவது ஒரு பேர்ல நெலம் இருக்கறதா நான் காட்டிகிடுறேன். அதை வேற யாருக்கும் வித்துறலாம், அப்படியே அனந்தம்மா நெலத்தில ஒரு கால் செண்டு கம்மியா அளந்து குடுத்தா போதும். ஒரு செண்ட் கிடைக்கும் என்ன சொல்லுறீங்க தங்கராசு?"

"என்ன பேசறீங்க... அதிகமா இருக்குற முக்கா செண்ட் நெலத்த விடுங்க... கால் செண்டு கம்மியா காட்டினா நெலத்த விக்குற அனந்தம்மாவுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் ரூபா கம்மியா கிடைக்குமே?"

"ஊர்க்காரன் எல்லாம் ஓடி ஆடி ஒழைச்சி சம்பாரிச்ச நெலமா இது?  குச்சை வச்சி வளைஞ்சி பிடிச்ச நெலம் தான... ஊரோட கடைசி நெலம், அடுத்த நெலம் கூசாலிபட்டி ஊர சேரந்தது, இரண்டு ஊர்க்காரனும் வளைஞ்சி பிடிச்சத்துல ரெண்டு ஊருக்கும் நடுவுல இந்த நிலம் இருக்கிறதாலயும் அனந்தம்மா நிலத்துல கால்வாசி யானை முங்குற அளவு கிடங்கு இருந்தால்தான இந்த நிலம் சர்வே புக்ல காணாம போயிருக்கு.!"

"அதுக்காக... நெலத்த விக்குற அனந்தம்மாவுக்கும், வாங்குற வேலுச்சாமிக்கும் பாதிப்பு வரக் கூடாதுல்ல..."

"என்ன பாதிப்பு வரப்போகுது யாருக்கும் எந்த பாதிப்பும் வர போறதில்ல..."

"என்ன அப்படி சொல்லுறீங்க... வாங்குற விக்குற ரெண்டு பேருக்குமே பாதிப்பு தான... அதிகமா இருக்கிற நிலத்தை சேர்த்து பத்திரம் முடிக்க என்ன வழியோ அத பண்ணலாம் அனந்தம்மா பொண்ணு கல்யாணதுக்கு கொஞ்சம் கூடுதல் பணம் கிடைக்கும் வாங்குற வேலுச்சாமிக்கும் அந்த கிடங்க மண்ணு போட்டு நெப்புற பணம் விரயம் ஆகாம இருக்கும். மனசாட்சியோட பேசுங்க..."

தங்கராசுவைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் பரமசிவம்.

"பிழைக்கத் தெரியாத ஆளு கிட்ட பேசி என்ன ஆகப் போகுது... நீங்க ஒத்துக்கிடலனா உங்க VAO கிட்ட நான் பேசிக்கிடுறேன். இதுக்கு முன்னயும் இது போல ரெண்டு மூணு முறை நீங்க ஒத்துக்கிடல... நல்லா யோசிச்சி சொல்லுங்க..."

"இல்ல... நான் பொழைக்க தெரியாத ஆளாவே இருந்துட்டு போறேன். என்னை நம்பின ரெண்டு ஜீவன்களுக்கு நான் தெரிஞ்சே துரோகம் பண்ண விரும்பல..."

"ம்ம்ம்... "ஒங்கள மாதிரி தலயாரி வேல பாக்குறவன், வீடு வாசல்,  வண்டின்னு வாழுறான் நீங்க என்னடானா இன்னும் ஓட்டு வீடு, ஓட்ட சைக்கிள்னு சுத்திட்டு இருக்கீங்க... ஏற்கனவே உங்கள வேற ஊருக்கு மாத்துறத பத்தி பேசிட்டு இருக்காங்க, இதுக்கு அப்புறம் உங்க விருப்பம்."

பதில் எதுவும் கூறாமல் அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்து சென்றார் தங்கராசு. 

பரமசிவம் சொல்லுற மாதிரி நாம நாலு காசு பணம் சம்பாதிக்கல,  பிள்ளைகளுக்கு சொத்து சேக்கல, ஓட்டு வீட்ட கார வீடா மாத்தி கட்டலனு சொந்தம் பந்தம் நக்கல் நையாண்டி பேசுவாங்களோ...? என யோசித்தபடியே தெருவில் இறங்கி நடந்தார் தங்கராசு, எதிரில் நிறை குடத்தைத் தலையில் சுமந்தபடி இவரைப் பார்த்துச் சிரித்தபடி அனந்தமாவின் மகள் ஆனந்தி நடந்து வருவதைப் பார்த்ததும் தலை நிமிர்ந்து மகிழ்ச்சியில் நடக்கத் தொடங்கினார்.
·          


கெடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 




நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.



Wednesday, 5 December 2018

பெரிய மனுசி


தலையிலிருந்த ரேசன் அரிசிப் பையை இடது கையாலும் வலது கையில் சீனி இருந்த மஞ்சள் பையையும் பிடித்தபடி நடந்து வந்தாள் ராக்கம்மா. மனதில் இன்னும் தாங்க முடியாத கோவம். வெடித்துச் சிதறுகிற அனல் வார்த்தைகள்.

"நான் நடந்து போற தூசில அறுந்து போற தூசிக்கு பெறுவியாழா நீ...? நாசமா போக என்னையாடி பேசின ஓ வாய்ல புத்து பொறப்பட... நாசமா போக..."

தடக் தடக் என்று கால்களை அகல எட்டு வைத்து நடக்கிற நடையில் பூமி அதிர்கிறது.

வாசலில் பையை இறக்கி விட்டு குழாயடிக்கு ஓடணும். நல்ல தண்ணி பிடிக்கணும்.

"அந்த கொல்லிவாய் பிசாசு... வாய் புழுத்த சிறுக்கி வேற வீட்டு வாசல்ல நிப்பா... அவா முன்னாடி போகவா? ச்சேய்..."

மண் பானையில் புளித்துப் பொங்கியிருந்த நீச்சத் தண்ணியைக் குடித்து விட்டு, கிண்ணத்தில் சோறு வைத்து தயிர் ஊற்றிப் பிசைந்து சுப்பிரமணிக்கு வைத்தாள். வாலையாட்டியபடி சாப்பிடத் தொடங்கியது. "ஒனக்கு இருக்குற பாசங் கூட அவளுக்கு இல்லியே..." என பே(ய்) மூச்சி பெருமூச்சு வாங்கியபடியே வீட்டு முற்றத்தில் பூத்துக் குலுங்கிய பப்பாளி  மரத்து அடியிலிருந்த உரல் மேல் அமர்ந்தாள். இங்குட்டு குத்தி அங்குட்டு வாங்குகிற மாதிரி பூமாரி பேசியது இவளுக்கு இன்னும் கோவம் அடங்கவில்லை.

ரேசன் கடைக்குப் பக்கத்தில் தான் பூமாரியின் வீடு இருந்தது. செம்மண் தெரு, வீட்டின் முன் இருந்த காலி நிலம் தெருவைத் தாண்டி எதிரிலிருந்த ரேசன் கடை வரை பரவி இருந்தது. பம்பரம், சில்லாங்குச்சி, மரம் தொத்தி குரங்கு, கோழிக் குண்டு விளையாடும் அரை டவுசர் போட்ட சிறுவர்கள் முதல் ட்ராக் சூட் போட்டு தாயம், கேரம் விளையாடும் இளவட்டங்கள் என எப்போதும் அந்த தெரு கலகலப்பாக இருக்கும்.

வீட்டின் முன் வேப்ப மர நிழலில் நொண்டி விளையாடிக் கொண்டிருந்தாள் பூமாரியின் மகள் மாடத்தி. சாப்பிட்ட ஈயத்தட்டைக் கழுவி வெளியே ஊற்ற வந்தவள், மகள் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நொண்டியடித்தபடியே தாவிக் குதிப்பதைப் பார்த்ததும் மரக் கிளையை எட்டிப் பிடித்து ஒடித்தாள். முட்டி தெரிய இடுப்பில் தூக்கிச் சொருகியிருந்த பாவடைக்கு கீழ் முழங்காலில் பொளீர் என அடி இறங்கியது.

"எம்மோய்... எம்மோய்..." என ஒரு அடிக்கு ஒரு குதி குதித்து கத்திய மாடத்தி, ரேசன் கடையில் வரிசையில் நின்று இருந்த ராக்கம்மாவாவைப் பார்த்து ஓடினாள்.

"சின்னம்மா அம்மைய பாரு என்ன அடிக்கா..." என அவளுடைய முதுகுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டாள்.

"எக்கோய் எதுக்கு பொட்ட புள்ளைய அடிக்கே? பச்ச மண்ணுக்கு என்னத்த தெரியும்?"

"பள்ளியோடத்துக்கு பெரிய பரிட்ச லீவு விட்டாலும் விட்டானுக இந்தப் பயலுக பொழுதனைக்கும் இங்கனகுள்ள தான் கெடக்கானுக... வேளா வேளைக்கு திங்க கூட போகமா இங்கனக்குள்ளயே எழவு காத்து கிடக்கானுக... பொட்ட புள்ளனா கூச்ச நாச்சம், அடக்கம் ஒடுக்கும் வேணாம்?"

ராக்கம்மா நின்ற இடத்தில் இருந்து முன் நோக்கி வந்து பூமாரி முகத்தை உற்றுப் பார்த்து நாடியில் கை வைத்து சிரித்தபடியே,

"அதுக்கு ஏங்கா அஞ்சாப்பு முடிச்சி ஆறாப்பு போற பச்ச புள்ளய அடிக்கே? ஒனக்கு என்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா? வெளயாடுற வயசில வெளயாட விடு"

இதைக் கேட்டவுடன் கோவமாக வெடுக்கென ராக்கம்மாவை ஒரு பார்வை பார்த்த பூமாரி,

"ஞே... பின்ன அடிக்காம கொஞ்சுவாங்களா? இன்னிக்கோ நாளைக்கோ எப்ப ஒக்காருவான்னு தெரியல... இவா ஒனக்கு பச்ச புள்ளயா? அது சரி... சொமந்து, முக்கிப் பெத்து, வளத்து இருந்தா தான புள்ளயோட அரும தெரியும். ஒன் வீட்டு பப்பாளி மரம் கூட மலட்டு மரம் தான வெறும் பூ மட்டும் தான் பூக்குது..."

பூமாரியின் தீக்கங்குச் சொற்களில் ராக்கம்மா ஆடிப் போனாள். கல்யாணமாகி ஏழெட்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ராக்கம்மாவை பூமாரியின் சொல் அம்பு தாக்கித் தள்ளியது. நாலைந்து வருடமாக இந்த மாதிரி மறைமுகமாக பேசியவர்கள் உண்டு. ஆனால் நேருக்கு நேர் நின்று அம்பு விட்டது பூமாரி தான். 'ஒரே குடும்பத்துல பங்காளிகளுக்கு ரெண்டு பேரும் வாக்கப்பட்டுருக்கோம், இவாளே இப்படி பேசுறாளேன்னு' தான் ராக்கம்மாவுக்கு வருத்தம்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நெருங்கிய சொந்த பந்தமாக இருந்தாலும் நல்லது கெட்டதுக்கு போவதை நிறுத்திக் கொண்டாள்.

ரேசன் கடைக்கு வரும்போதோ, வழியில் எங்காவது பார்த்தாலோ தேன் மிட்டாய், கமர்கட், கல்கோணா பரிமாற்றம் என மாடத்தியுடனான ரகசிய சந்திப்பு நடந்து கொண்டு தான் இருந்தது.

மார்கழி மாசத்து குளிருக்கு சேலை முந்தானையை இழுத்துப் போர்த்தியபடி பால்கார முனியான்டியின் வெண்கல மணியின் கிணுகிணுப்பு ஓசை கேட்டதும் கோலம் போடுவதை பாதியில் நிறுத்தி விட்டு எழுந்து வந்தாள் ராக்கம்மா. இரண்டு மஞ்சள் நிற டோக்கனை கிழித்துக் கொடுத்து விட்டு சொம்பில் வாங்கிய பால் சிந்தாமல் இருக்க கை வைத்து மறைத்துப் பிடித்தபடியே திரும்பியவள் தூரத்தில் தலையில் முக்காடு போட்டு போகும் பெண்ணைப் பார்த்து,

"பால்காரரே யார் அது இந்த நேரத்தில்?"

"ஒங்க அக்கா தான் பிள்ளைக்கு பால் வாங்கிட்டு போகுது."

"யாரு... பூமாரியா? அவளா... எனக்கு அக்காவா? த்தூ... வாய பால் ஊத்தி கழுவுங்க... ஆமா அவா சாயங்கால பால் தான வாங்குவா இன்னைக்கு என்ன?"

"ஒனக்கு விசயம் தெரியாதா? பால் வாங்க மட்டும் இல்ல... நேத்து புள்ள வயசுக்கு வந்துட்டாளாம், அதான் தண்ணி ஊத்த கடன் கேட்டுட்டு போறா... மாச கடைசியில எங்கிட்ட ஏது காசு... ஆந்திராவுக்கு டவர் லைன் வேலைக்கு போன ஒங்க ரெண்டு பேரோட வீட்டுக்காரங்களும் மத்தவங்களும் அடுத்த மாசம் பொங்கலுக்கு தான் வருவாங்களாம்..."
பால்கார முனியான்டி சொல்லி முடிக்கும் முன்,

"எக்கோய்..." என கத்தியபடியே ஓடினாள். ஓட்டமும் நடையுமாய் ஓட, ஈரப் பாவாடை டப் டப் டப் டப்பென்று கதறுகிறது. ஈரச் சேலை எல்லாம் செம்மண் புழுதி மண் அப்பி இருக்கிறது. சொம்பில் இருந்த பால் சிந்தி வழிந்து ஓடியது. ராக்கம்மாவின் கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.

"ஏன்கா... எம் புள்ள பெரிய மனுசியா ஆனத எங்கிட்ட கூட சொல்லலைல...? மாமா வரும் வரை காத்து இருப்பியா... என்ன?" தேம்பி தேம்பி அழுதபடியே காதில் இருந்த கம்மலைக் கழட்டினாள் ராக்கம்மா, "விடிஞ்சதும் போயி இத அடகு வைக்கா... தாலிய மஞ்சக்கயிறுல கோர்த்துகிடுறேன் இந்த ஜெயின அவா கழுத்துல போட்டு விடு."

"அடச் சீ... கிறுக்கு கழுத... அத ஏன் இந்நேரத்துக்கு கழட்டுற?" வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே, "வா வந்து ஒம் புள்ளய முதல்ல பாரு..." என ராக்கம்மாவின் கையைப் பிடித்து கூட்டிச் சென்றாள் பூமாரி.

  •  
குறள் 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

பொருள்:
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

Monday, 26 November 2018

பள்ளியோடம் லீவே...!!!


மாடசாமி கோவில் ஆலமரத்தின் கீழ் பெரிய மாடன் சாமியாடி சின்னத்துரை கோவில் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். ஆல மர நிழலில் ஆடுகள் இளைப்பாறிக் கொண்டிருக்கவிழுதுகளில் ஊஞ்சல் ஆடியும், மரம் தொத்தி குரங்கு ஆட்டம் என விளையாடிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுவர்களை சீசன் துண்டால் சுற்றி விரட்டிக் கொண்டிருந்தார் ஒண்டிவீரன் சாமியாடி முனியசாமி.

"டேய்... ஒன்னுக்கு மணி அடிக்கிற நேரம் கூட ஆகல அதுக்குள்ள ஏன்டா வந்தீங்க?"

"இன்னிக்கி பள்ளியோடம் லீவே...!!!" என்று கூட்டமாக சேர்ந்து கத்தினார்கள்.

துண்டை வைத்து விரட்டியவருக்கு, பிள்ளைகள் போக்கு காட்டியபடியே...  முனியசாமி ஒண்டி வீரன் சாமி வந்து ஆடும் போது பக்தர்கள் படைக்கும் முறுக்கு மாலை, அதிரச மாலை, குழல் அப்பள மாலைகளைக் கழுத்தில் இருந்து பிள்ளைகளுக்கு பிய்த்துக் கொடுத்தபடியே கோவில்பட்டி நையாண்டி மேளத்திற்கு ஏற்ப கையில் உள்ள சலங்கை கட்டிய ஈட்டியைத் தரையில் குத்திகழுத்தை வளைத்து, குனிந்து நெளிந்து ஆடுவது போல் ஆடிக் காட்டி அவரிடம் வம்பு இழுத்துக் கொண்டிருந்தனர்.


"என்ன மாமா புள்ளய எல்லாம் பள்ளியோட நாள்ல யூனிபாம் சட்டையோட விளையாடுதுக என்ன வெசயம்?" என்றார் சின்னத்துரை.

"அது வந்து மாப்ள... ஏதோ லீவாம் என்னன்ட்டு தான் தெரியல பையோட இங்க வந்து ஆட்டம் போடுதுக இனி மத்யான சத்துணவு சோறு திங்காம வீட்டுக்கு போகாதுக" என்று துண்டைச் சுற்றினார் முனியசாமி.

சின்னத்துரை பிள்ளைகளை நோக்கி கை ஆட்ட, மரத்தில் ஆலம் பழம் பறித்துக் கொண்டிருந்த பிள்ளைகளும் விழுதுகளில் ஊஞ்சல் ஆடிய பிள்ளைகளும் மெல்ல வந்து அவர் முன்னால் நின்றனர். பள்ளிக்கூடம் போய் விட்டு பாதியில் வந்த காரணம் என்னவென்று கூட்டத்தில் சற்று உயரமாக இருந்த பையனை நோக்கி கேட்டார்.

"இன்னிக்கி பள்ளியோடம் லீவு... லெனின் அண்ணன் தான் பெல் அடிச்சி இன்னிக்கி ஸ்ட்ரைக் வீட்டுக்கு போங்கன்னு சொல்லிச்சி..."

"மாமா கேட்டீரா? ஒம்ம பேரனோட வேல தான் போல... கோவில் பக்கம் வராம ஒம்ம பேர மவன் மதியழகன் கெடுத்தான், இப்ப பேரன் ஆரம்பிச்சி இருக்கான் போல..." என்று நக்கலாகச் சிரித்தார் சின்னத்துரை.

மகனையும் பேரனையும் பற்றி குறை கூறுவதைக் கேட்டு முனியசாமிக்கு முகம் சிறுத்து விட்டது.

பிள்ளைகளிடம் பேரன் பள்ளிக்கூடத்தில் இருப்பதைக் கேட்டு அறிந்து, கம்மாய் கரையில் ஏறி வேகமாக பள்ளிக்கூடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

பள்ளிக்கூடத்தின் முன்பு இருந்த வாகை மரத்தின் நிழலில் சைக்கிளில் அமர்ந்து இருந்த மாணவர்களில் ஒருவன் தூரத்தில் முனியசாமி வேகமாக வருவதைப் பார்த்த உடன் சத்துணவு அமைப்பாளரிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்த லெனின் பாரதியிடம் வந்து காதில் கிசுகிசுத்தான். ஐயத்தோடு மைதானத்தைப் பார்த்ததும் சத்துணவு அமைப்பாளர் நாராயணனுக்கு முகம் மலர்ந்தது.

வெயிலில் நடந்து வந்த களைப்பில் மூச்சு வாங்க, வியர்வையைத் தோளில் கிடந்த துண்டால் துடைத்தபடியே வந்தவரைப் பார்த்து பின் வாங்கினான் லெனின் பாரதி.

"ஏலேய் பாரதி நில்லுல அங்க" அதட்டல் குரல் கேட்டதும் அப்படியே நின்றான்.

"எதுக்குலேய் இப்படி சண்டித் தனம் பண்ணிட்டுருக்க?"

"அப்படி கேளுங்க, ஸ்ட்ரைக்ன்னு சொல்லி பெல் அடிச்சி பிள்ளைகள வீட்டுக்கு அனுப்பினதும் இல்லாம இப்ப மதிய சாப்பாடும் பண்ணணுமாம்" என்று பொருமினார் நாராயணன்.

"நீ ஏன்டா பெல் அடிக்க? எத்தன வாட்டி சொல்லுறது அதுக்குன்னு அரசாங்கம் தனியா சம்பளத்துக்கு ஆள் போட்டுருக்கான்ல... நீ என்ன ஹெட் மாஸ்டரா இல்ல கலெக்ட்டராலேய் லீவு விட..."

"தாத்தா பிரச்சினை என்னான்னு தெரியாம பேசாதீங்க, லீவுன்னா என்ன? பக்கத்து ஊரு பிள்ளைக சாப்பிட்டு போட்டும், கரஸ்பாண்டன்ட் வந்ததும் பேசிட்டு நாங்களும் வீட்டுக்கு வந்துடுவோம் நீங்க போங்க..."

"அப்புடி என்னடா பெரச்சன அத சொல்லுலேய் மொத..."

"அது சொல்ல முடியாது தாத்தா, அவர் வரட்டும் சொல்லிகிடுறேன்"

நாராயணன் வாயில் கை வைத்து 'உங்க கிட்டயே சொல்ல மாட்டானாமே' என்பது போல் ஆச்சரியப் பார்வை பார்த்தது முனியசாமிக்கு இன்னும் கோபம் வரச் செய்தது.

"அவ்வளவு திமிராலேய் ஒனக்கு... ஒங்க அப்பன் புத்தி அவன மாதிரியே ஊர் வம்பு வளத்துட்டு இருக்க..."

"அப்பாவுக்கு என்ன? அவரைப் பத்தி ஊருல யாராவது ஒத்த ஆளு நாக்கு மேல பல்லப் போட்டு ஒத்த பழி சொல்லு சொல்ல முடியுமா? அவரு மட்டும் இல்லனா இந்த ஊருக்கு ரோடு, மினி பஸ், குடி தண்ணி, இலவச பட்டா, வீடு, கவர்மெண்ட் சலுகைன்னு வந்து இருக்குமா?"

"அப்போ அவன மாதிரியே நீயும் இந்த வயசுலயே கொடி பிடிச்சி திரிய போறியாலேய்... இப்படி ஸ்ட்ரைக் அடிச்சு தான போன வருசம் பத்தாப்பு பரிச்ச எழுத விடல அடுத்த வருசம் பன்னெட்டாப்பு வேற, எப்படியோ போ..."

இதை எல்லாம் ஆசிரியர்கள் அறையின் வாசலில் நின்று கேட்டுக்கொண்டிருந்த கனகவள்ளி, முனியசாமி மற்றும் லெனின் இருவரையும் அழைக்க, ஆசிரியர்கள் அறையில் முனியசாமி நாற்காலியில் அமர பக்கத்தில் லெனின் நின்று கொண்டான்.

"என்ன மாமா நீங்களும் மதியழகன் மச்சானப் பத்தி புரியாம பேசுறீங்க... அவரு கோவிலுக்கு வரல, சாமி கும்பிடல அது தான் உங்க பிரச்சினையா? ஊர்ல என்ன மாதிரி பல பேருக்கு அவரு தான் சாமி, ஆனா அவரு என்னைக்குமே எல்லோருக்கும் தோழர் தான். போன வருசம் லெனினுக்கு பரிட்சை எழுத ஹால் டிக்கட் தரலனு தெரிஞ்சு ஊர் மக்களே சேர்ந்து வந்து பிரச்சினை பண்ணி ஹால் டிக்கட் குடுக்க வச்சாங்களே எதுக்கு? லெனின் மேல தப்பு இருந்தா ஊர் சப்போர்ட் பண்ணி இருக்குமா சொல்லுங்க...?" என ஆசிரியர் கனகவள்ளி கேட்டதும் முனியசாமி பழைய சம்பவங்களை அசை போட ஆரம்பித்தார்.

மழைக்கு ஒழுகிய ஓட்டுக் கட்டிட பள்ளிக் கூடத்தை மதியழகன் பல முறை போராட்டம் நடத்தி, மனு எழுதிப் போட்டு இரண்டு வருடம் முன்பு இரண்டு மாடிக் கட்டிடமாக கட்ட ஆரம்பித்து இருந்தார்கள். கட்டிட வேலை முழுவதாக முடியும் முன்பே கோடை விடுமுறை நாட்கள் முடிந்து விடவே அவசர அவசரமாக சிவகாசி தொகுதி ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினர் வந்து திறந்து வைத்தார்.

இரண்டாவது மாடியில் தடுப்புச் சுவர் முழுவதும் கட்டி முடிக்காமல் கம்பிகள் மட்டும் நீட்டிக் கொண்டு இருந்தது, ஒரு மழை நாளில் தேங்கி கிடந்த தண்ணீரில் வழுக்கி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து கால், தாடை உடைந்து உயிருக்குப் போராடி, தாடையில் பிளேட், செயற்கைப் பல் பொருத்தி அந்த மாணவி எழுந்து நடக்க ஆறேழு மாதம் ஆனது.

அந்த சம்பவம் நடந்த அன்று மாணவர் சங்க தலைவன் லெனினும் அவனுடைய நண்பன் செயலாளர் ஜோதிபாசுவும் பள்ளிக் கூடத்தின் இரண்டாவது மாடியில் ஏறி இப்பவே தடுப்புச் சுவர் கட்டணும் என்றும் அப்படி கட்டவில்லை என்றாலோ, மேலே வர யாரும் முயற்சி செய்தாலோ குதித்து விடுவோம் என்று கூறி போராட்டம் நடத்த அரசு அதிகாரிகள் எல்லாம் வந்து அன்றைய இரவுக்குள் தடுப்புச் சுவர் கட்டி முடிக்கப்பட்டது.

சில மாதங்கள் கழித்து இராஜபாளையத்தில் மலை அடிவாரத்தில் கல்லூரி மாணவனை கொலை செய்து மரத்தில் தொங்கவிடப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தியும் பள்ளிக்கு விடுமுறை விடக்கோரி போராட்டம் செய்து மாணவ மாணவியர்களைத் திரட்டி கோவில்பட்டியில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டான். 

அரையாண்டுத் தேர்வு சமயத்தில்  அறிவியல் ஆராய்ச்சி செய்யும் கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் என்று போராட்டம் நடத்தி பள்ளி மாணவர்களை வாசலில் தடுத்தி நிறுத்தினான். இரண்டு நாட்கள் பள்ளிக்கு  விடுமுறை அறிவித்த நிர்வாகம் கருவிகளை, உபகரணங்களை வரவைத்த பின்பு பள்ளிக்கூடத்தை திறந்தது.  

இதை எல்லாம் காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அவனை பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஊரில் உள்ள பெரியவர்கள், பொது மக்கள் லெனினை பரிட்சை எழுத அனுமதிக்க வற்புறுத்தி போராட்டம் நடத்திய பிறகு தான் நிர்வாகம் சம்மதித்தது.

"எதுக்கு மாமா பேசாம இருக்கீக... பழைய நியாபகமா? இன்னைக்கு என்ன நடந்ததுன்னு இவன் சொல்லி இருக்க மாட்டானே...?"

சிந்தனை களைந்தவர்,

"ஆமா தாயி சொல்ல மாட்டக்கானே கல்லுலிமங்கன்"

"ம்ம்ம்... இந்த விசயத்தை எப்படி சொல்லுவான்? எங்கிட்ட படிக்கிற பொம்பள பிள்ளைக எங்கிட்ட கூட சொல்லல... "

இடையில் மறித்தவர் கோவமாக,

"அப்படி என்னமா பண்ணினான் இந்த பய சொல்லு..."

"அட இருங்க மாமா... இவன விட மூத்த ப்ளஸ்டூ பிள்ளைக இவங் கிட்ட சொல்லி இருக்குக... லெனின யாரும் குறை சொல்ல மாட்டாங்க."

முனியசாமி ஒன்றும் புரியாமல் அமர்ந்து இருக்க கனகவள்ளி தொடர்ந்தாள்.

"ஸ்கூல் கிரவுண்ட் வேலி தாண்டி ஓடைக்கு அந்தப்புறம் தீப்பெட்டி கம்பெனி இருக்குல அதுல மொட்டை மாடில கொஞ்ச நாள் முன்ன வர குச்சி தான் காயப் போடுவாங்க இப்ப குடிசை செட் போட்டு இருக்காங்க..." சொல்லிவிட்டு சிறிது நேரம் அமைதியானாள்.

லெனின் அதற்கு மேல் சொல்ல வேண்டாம் என்பது போல் கண்களால் கெஞ்சினான்.

கனகவள்ளி செருமிவிட்டு தொடர்ந்தாள்,

"இண்டர்வெல் பெல் அடிக்கும் கொஞ்ச நேரம் முன்னாடியும் மறு பெல் அடிச்ச பிறகும் கம்பெனில வேல பாக்குற ஆம்பளைக மாடியில் ஏறி இறங்குறாங்கலாம் கிரவுண்ட் மூலையில இருக்குற பிள்ளைகளோட பாத்ரூம் மேல ஓப்பனா தான் இருக்கு..." சொல்லி முடிக்கும் முன் கனகவள்ளியின் குரல் உள் சென்று எச்சில் முழுங்க கண்களில் கண்ணீர் வழிந்தது.

"யாத்தே... என்ன தாயி சொல்லுத... அடேய் சண்டாளப் பயலுகளா ஒங்க புத்தி ஏன்டா இப்படி போகுது...? ஏலேய் பாரதி நீ அந்த தப்பிலி பயலுகள சும்மாவாடா விட்ட...?" கோவத்தில் கத்தின முனியசாமியின் சிவந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

"பொம்பள பிள்ளைக விவகாரம் தாத்தா... அப்படி எல்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு பண்ண முடியாது... அவனுகளுக்கு இருக்கு... இப்ப பிரச்சினை நாளைக்குள்ள பாத்ரூம் மேல ஒரு ஆஸ்பட்டாஸ் சீட் ஆவது போடணும். கரஸ்பாண்டன்ட் வரட்டும்."

"ஒன்ன போயி தப்பா நினைச்சிட்டேனடா... நாட்டாம சின்னத்துரை மாடன் கோவில்ல தான் இருக்கான் நான் கூட்டி வரேன் நீ போயி ஒன் அப்பன கூட்டி வாடா... இன்னைக்கி பாத்ரூம் மேல மறப்பு வச்ச பிறகு தான் வீட்டுக்கு போகணும்."

கனகவள்ளி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

"நீங்களும் ஒங்க ஏழேழு தலை முறையும் வாழயடி வாழயா நல்லா இருக்கணும் மாமா... மதியழகன் மச்சான வரப்போற பஞ்சாயத்து தேர்தல்ல தலைவரா அன்ன போஸ்ட்டா தேர்ந்தெடுக்க போறாங்க ஊர்ல இனி எங்க தலை முறையும் நல்லா இருக்கும்."

முனியசாமியின் கண்களில் இந்த முறை ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.  
·          

குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

பொருள்:
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.


நடுவுல கொஞ்சம் நெலத்தக் காணோம்...

ஊரின் மத்தியில் இருந்த சமுதாயக் கூடத்தின் திண்ணையை நோக்கித் தோளில் கிடந்த துண்டால் வியர்வை வடிந்த முகத்தைத் துடைத்தபடியே வந்த வேலுச்சாமி...